Description
தமிழ்ப்பிரபா எழுதியுள்ள ‘பேட்டை’ சென்னையின் சிந்தாதிரிப்பேட்டை பகுதியைத் தன் களமாகக் கொண்டுள்ள நாவல். நிலப்பரப்புசார் படைப்புகளுக்கே உரிய ஆதாரமான தன்மைகள் பலவற்றையும் இயல்பாகத் தன்னுள் கொண்டிருக்கிறது. அந்தப் பகுதி உருவான விதம், அங்கு வாழ்க்கை உருப்பெற்று, உருமாறிவந்த விதம், அந்தப் பகுதியின் தன்மையைத் தீர்மானிக்கும் பல்வேறு காரணிகள், தர்க்கத்துக்குள் அடங்காத வாழ்வின் கோலங்கள் ஆகியவை புனைவுத் தன்மையுடன் வெளிப்படுகின்றன. படைப்புக்குத் தேவையான நம்பகத்தன்மையுடனும் இவை வெளிப்படுகின்றன. மனிதர்கள், அவர்களின் மொழி, தொழில்கள், நம்பிக்கைகள், வசவுகள், மதிப்பீடுகள், சண்டைகள், ஏமாற்றங்கள், சாதனைகள், சறுக்கல்கள், மோதல்கள், உறவுகள், பிறழ்வுகள் எனப் பல்வேறு அம்சங்களும் இந்நாவலில் ஊடுபாவாய்க் கலந்துள்ளன. காலமாற்றத்தை அடிக்கோடிட்டுக் காட்டாமல் இயல்பாகவும் நுட்பமாகவும் வெளிப்படச்செய்வது மேலான படைப்புத் திறனுக்கே சாத்தியப்படும். இந்த நாவலில் அது சாத்தியப்பட்டிருக்கிறது. சென்னையின் விளிம்புநிலை மக்களின் வாழ்வு குறித்த அழுத்தமான சலனங்களை ஏற்படுத்தும் புனைவுகள் வாசகப் பிரக்ஞையில் அரிதாகவே வருகின்றன. தமிழ்ப்பிரபாவின் ‘பேட்டை’ அத்தகையதொரு முக்கியமான படைப்பு. -அரவிந்தன்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.